ட்ரெண்டிங்

தந்தை கண் முன்னே உயிரிழந்த மகன்! 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள சவுண்டம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் அர்த்தநாரி. இவர் மளிகைக் கடையை நடத்தி வருகிறார். வீடும், கடையும் ஒன்றாக உள்ள நிலையில், தெரு பக்கம் மளிகை கடையை வைத்துள்ள அர்த்தநாரி, தனது கடையின் பெயர் பலகையை மாற்ற முடிவுச் செய்துள்ளார். 

அதன்படி, இன்று (மே 16) பிற்பகல் 03.00 மணியளவில் தனது மகன் தண்டபாணி உதவியுடன் பழைய பெயர் பலகையைக் கீழே இறக்கி வைக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த அர்த்தநாரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தகவலறிந்து விரைந்து வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், தண்டபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம், அம்மாப்பேட்டை பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, மின்சாதன பொருட்களை கவனமுடன் கையாள வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.