ட்ரெண்டிங்

தீவட்டிப்பட்டி கோயில் திருவிழாவில் கலவரம்! 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே கோயில் திருவிழா தொடர்பான கலவர வழக்கில் 31 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, தங்களை கோயிலுக்கு சென்று வழிப்பட அனுமதிக்க வேண்டும் என பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். மேலும், தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி கடைகளுக்கு தீ வைத்தனர். 

காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தற்போது வரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோத சம்பவத்தில் ஈடுபட்ட பிறர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, கலவரம் நிகழ்ந்த இடத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கலவரம் நடந்த இடத்தில் உள்ள கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.