ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக உதவியாளருடன் சக்கர நாற்காலிகள்! 

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 16) ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 1,257 வாக்குச்சாவடி அமைவிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவ்வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படுவதைக் கண்காணித்து உறுதிசெய்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள 1,257 வாக்குச்சாவடி அமைவிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக தலா ஒரு உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள 51 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உதவியாளருடன் கூடிய இரு சக்கர நாற்காலிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1,308 சக்கர நாற்காலிகள் உதவியாளருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி மற்றும் தேவைப்படும் இடங்களில் சாமியானா பந்தல், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய தினம் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அழகாபுரம்புதூர், அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.