ட்ரெண்டிங்

விழிப்புணர்வு நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிமையான நினைவுகளாக அமைந்துள்ளது-

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் ஏற்காடு எங்கள் பெருமை விழிப்புணர்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று (செப்.23) கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

 

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் ஏற்காடு மலைப்பகுதியினை தூய்மையாகவும், பசுமையாகவும் வைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பொது அழைப்பு கொடுக்கப்பட்டது. அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு 1000- க்கும் மேற்பட்ட நபர்கள் ஏற்காடு அடிவாரம் முதல் 50 அடி பாலம் வரை சென்று மீண்டும் அடிவாரம் வந்து சேரும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

 

சுற்றுலா வரும் பொதுமக்கள் வீசும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் வன விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்காட்டினை பசுமையாகவும், தூய்மையாகவும், வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வகத்தின் சார்பில் ஏற்காடு எங்கள் பெருமை என்ற விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று நடத்தப்பட்டது.

 

இன்றைய தினம் 7 வயது குழந்தைகள் முதல் 75 வயது உடையவர்கள் என ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர். மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரநிதிகளும் ஒன்று சேர்ந்து கலந்து கொண்டனர். குறிப்பாக மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் பொது அழைப்பின் பெயரில் ஈடுபாட்டோடு கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

 

காலை உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த நடைப்பயணம் அமைகின்றது. மேலும், ஏற்காடு எங்கள் பெருமை விழிப்புணர்வு நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிமையான நினைவுகளாக அமைந்துள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, ஏற்காடு எங்கள் பெருமை என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வன அலுவலர் காஷியப் ஷஷாங் ரவி, தனி மாவட்ட வருவாய் அலுவலர கீதா பிரியா, மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தில் விநாயகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் சிவரஞ்சன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் தமிழரசி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மயில் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.