ட்ரெண்டிங்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை! 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 46). இவர் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12- ஆம் தேதி அன்று தனது பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோவைக் காட்டுவதாகக் கூறி, ஆபாச வீடியோவைக் காட்டி சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். 

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13- ஆம் தேதி வடிவேலுவை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கு சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், வடிவேலு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். வடிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்து உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்துள்ளார். 

இதையடுத்து, வடிவேலு பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.