ட்ரெண்டிங்

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது!

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு வயது 40. கூலித் தொழிலாளியான இவர், தாதகாப்பட்டி கேட் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே எதிர் திசையில் வந்த மர்மநபர் கத்தியைக் காட்டி மிரட்டி, மோகனிடம் இருந்த ரூபாய் 1,450 பணத்தைப் பறித்துக் கொண்டுச் சென்று விட்டார். 

இதையடுத்து, கூலித் தொழிலாளி மோகன், உடனடியாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுச் செய்தனர். 

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், மூணாங்கரடு அம்மாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சாரதி என்பவர் தான் வழிப்பறியில் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த பணம் மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்தனர். 

காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.