ட்ரெண்டிங்

ரயில் இன்ஜினை அதிக வேகத்தில் இயக்கிய பைலட்களுக்கு நோட்டீஸ்!

சேலத்தில் 15 கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டிய ரயில் இன்ஜினை 50 கி.மீ. வேகத்தில் இயக்கிய ஊழியர்களுக்கு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி- மகுடஞ்சாவடிக்கு இடையே கடந்த மார்ச் 14- ஆம் தேதி சரக்கு ரயில் இன்ஜின் ஒன்று பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து, மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு சரக்கு ரயில் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்திற்குள் திரும்ப இயக்கப்பட்ட ரிலீஃப் இன்ஜினை அதன் பைலட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் இயக்கியதாகவும் அவ்வாறு இயக்கியதற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் புகார் எழுந்தது.

ஒரு பிரதான இருப்பு பாதையில் ரிலீஃப் இன்ஜினை 15 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பயணிகள் வண்டி ரயில்களின் தாமதத்தைத் தவிர்க்க 50 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், ரயில்வே சட்டவிதிகளை மீறியதாக சம்மந்தப்பட்ட பைலட் மீனா, உதவி பைலட் ரோகித் குமார் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.