ட்ரெண்டிங்

பிரதமர் வருகை- சேலத்திற்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்! 

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (மார்ச் 19) மதியம் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்குச் சேகரிக்கிறார். 

பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சரத்குமார் உள்ளிட்டோர் விமானங்கள் மூலம் சேலம் வந்துள்ளனர். 

பிரதமரின் வருகையையொட்டி, சேலம் விமான நிலையம், சேலம் மாநகரம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், பொதுக்கூட்ட மேடை, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2014- ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலத்துக்கு வருகை தந்த பிரதமர், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (மார்ச் 19) சேலம் வருகிறார். பிரதமரை வரவேற்க, சாலைகளில் பா.ஜ.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.