ட்ரெண்டிங்

சேலம் கலால் வரித்துறை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

சேலம் அணைமேடு பகுதியில் உள்ள கலால் வரித்துறை ஆணையாளர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கணக்கு மற்றும் தணிக்கை பிரிவு உள்பட இரண்டு அறைகளில் இன்று (மார்ச் 11) மாலை 05.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.


இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 10- க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலுவலகத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், தீ விபத்தில் கணினி, ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.