ட்ரெண்டிங்

தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும்- ஆட்சியர் அறிவுறுத்தல்! 

கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட தீத்தடுப்பு பாதுகாப்புக் குழுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (மார்ச் 15) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில், கோடை காலங்களில் அவசிய காரணங்கள் தவிர வெளியில் வருவதைத் தவிர்த்தல் வேண்டும், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும், தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும், சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும், அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.

குறிப்பாக, கோடை காலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, கற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு,
தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம், உடல் சோர்வு அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம்.

மேலும், ஏற்காடு, கருமந்துறை, பாலமலை உள்ளிட்ட சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்த்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும், கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும், முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குநர் தினகரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.