ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை வழங்கிய ஆட்சியர்! 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி. இ.ஆ.ப. தலைமையில் இன்று (மார்ச் 04) நடைபெற்றது. 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 343 மனுக்கள் வரப் பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 26 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி விண்ணப்பித்த கருங்கல்பட்டியை சார்ந்த மாற்றுத்திறனாளி சண்முகம் மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூபாய் 9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. மேலும், 10 நபர்களுக்கு கால்தாங்கிகள், செயற்கை அவையங்கள் 3 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்.