ட்ரெண்டிங்

மறவாதீர்கள்...நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்! 

சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2.92 லட்சம் குழந்தைகளுக்கு நாளை (மார்ச் 03) போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு முகாம் மார்ச் 03- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயினை உருவாக்கும் நோய்க்கிருமிகள் பரவலைத் தடுத்து இந்நோயினை அறவே ஒழிப்பதே இம்முகாமின் நோக்கமாகும். போலியோ சொட்டுமருந்து வழங்குவதால் குழந்தைகளின் உடலில் நோய்க்கிருமிகள் இருப்பின் அவை அனைத்தும் ஒரே சமயத்தில் வெளியேற்றப்பட்டு அழிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2,92,210 குழந்தைகளுக்கு கிராமப்புறங்களில் 2,060 மையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 296 மையங்கள் என மொத்தம் 2,356 மையங்களில் நாளை (மார்ச் 03)  காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது. இம்முகாமானது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் நடைபெற உள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டுமருந்து முகாமிற்காக சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள். ஆசிரியர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என சுமார் 9,500 நபர்கள் ஈடுபட உள்ளனர். 

மேலும், போலியோ தடுப்பு மருந்துகளை முகாமிடத்திற்கு கொண்டு சென்று வழங்குதல் மற்றும் மேற்பார்வை பணிகளுக்காக சுகாதாரத்துறை வாகனங்கள் மற்றும் பிற அரசுத்துறை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. அரசால் இலவசமாக வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து தரமானது மற்றும் பாதுகாப்பானது என்பதனை உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே நாளில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

எனவே, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் சிறப்பு முகாம் நாளான நாளையும் அருகில் உள்ள முகாம்களில் சென்று போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் வருங்காலத்தில் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.