ட்ரெண்டிங்

காங்கிரஸ் கசப்பிற்கு அ.தி.மு.க.விடம் மருந்து- வைகைச்செல்வன் பேட்டி! 

காங்கிரஸ் கட்சியின் கசப்பிற்கு அ.தி.மு.க.விடம் மருந்து இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். 

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் நேரில் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகைச்செல்வனிடம், தி.மு.க.- காங்கிரஸ் இடையே இழுபறி என்று தகவல் வெளியாகியிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அவரோ அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தைச் சமூகமாக உள்ளது. காங்கிரஸ்- அ.தி.மு.க. பேச்சுவார்த்தை என்ற யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது. தி.மு.க. உடனான காங்கிரஸ் கூட்டணி கசப்பிற்கு அ.தி.மு.க.விடம் மருந்து இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. 

ஓ.பி.எஸ் தரப்பிற்கு வேறு வழியே இல்லை, கடைசி வாய்ப்பாக  பா.ஜ.க.வுடன் இணைவது மட்டும் தான். அங்கும் சில சிக்கல்கள்  இருப்பதாக தகவல் வந்துள்ளது எனத் தெரிவித்தார்.