ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை. பதிவாளரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்! 


சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலுவை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

சேலம் மாவட்டம், கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய தமிழக அரசால் அமைக்கப்பட்டக் குழு, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்ய உயர்கல்வித்துறை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து பதிவாளர் தங்கவேலு மருத்துவ விடுப்பில் சென்று, இன்று மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

துணைவேந்தர் இன்றுக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாளை (பிப்.27) முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.