சேலம் மாநகரில் ஏவிஆர் ரவுண்டானா அருகில் பிரபல பேக்கரியுடன் கூடிய உணவகம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் இந்த உணவகத்திற்கு 100- க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், உணவகத்திற்கு முன்பு பெண்களுக்கான கழிவறைகள் உள்ளது.
இந்த கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த இளைஞர் விஜய்யை சூரமங்கலம் காவல்துறையினர் அதிரடி கைது செய்துள்ளனர். அத்துடன் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 வயதான அந்த இளைஞர், சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தான் எடுத்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு விஜய் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், விஜய் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.