ட்ரெண்டிங்

சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

 

நடப்பு 2023-2024 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் முதலியவற்றை செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதி கருதி நாளை (பிப்.11) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 3- ல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குரங்குசாவடி வார்டு அலுவலகத்திலும், கோட்டம் எண் 25- ல் பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி வளாகம் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 17- ல் உள்ள அழகாபுரம் வார்டு அலுவலகத்திலும், கோட்டம் எண் 30- ல் அச்சுராமன் தெரு அங்கன்வாடி மையத்திலும் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 32 மற்றும் 33- ல் பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண்.45-ல் பாலசுப்ரமணியம் திருக்கோவில் ஓபுளிச்செட்டித் தெரு மற்றும் கோட்டம் எண் 51 மற்றும் 52- ல் மணியனூர் அம்மா உணவக வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.

 

மேலும் நாளை (பிப்.11) அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை செயல்படும். எனவே பொதுமக்கள் இவ்வசதியினைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியவரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்தலாம்" எனத் தெரிவித்துள்ளார்.