ட்ரெண்டிங்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

 

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (பிப்.09) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியான "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும், தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தைக் கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும், அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும்,

கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்" என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இ.ஆ.ப. வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில்,தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.