ட்ரெண்டிங்

வேலைத் தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு!

 

சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற பிப்ரவரி 16- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடந்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற பிப்ரவரி 16- ஆம் தேதி அன்று சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100- க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 5.000- க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

 

காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும். 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 

பணிக் காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.