ட்ரெண்டிங்

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ). மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்களை பட்டப்படிப்பு பயிலும் பி.வ, மி.பி.வ, சீ.ம மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2,50,000- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login -இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verfication செய்ய வேண்டும்.

 

கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதியத்திற்கு (Fresh) பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை மாணாக்கர்கள் வரும் பிப்ரவரி 29- ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

 

மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 110- ல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.