ட்ரெண்டிங்

குரூப்- 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் கவனத்திற்கு!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் பிப்ரவரி 07- ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 4- ல் அடங்கிய பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் பிப்ரவரி 07- ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

 

சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இவ்வலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 294 பேர் அரசுப்பணியினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது நடத்தப்படவுள்ள குரூப் 4- ல் அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

மேலும் இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே சேலம் மாவட்டத்தைச் சார்ந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.