ட்ரெண்டிங்

பூ வியாபாரிகள் தர்ணா போராட்டம்!

 

சேலம் மாவட்டம், வ உ சி பூ மார்க்கெட் சங்கம் சார்பில் 140 கடைகள் உள்ளது. இதுதவிர, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைவித்த பூக்களை தற்காலிக வணிக வளாக பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

 

கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் வணிக வளாக பகுதியில் முதல் தளத்தில் பல்வேறு வணிக நிறுவனங்களின் கடைகளும் உள்ளது. இந்த நிலையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்களின் கடைகள் பொதுமக்களுக்கு தெரிவதில்லை எனக்கூறி வணிக வளாகத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் திடீரென பூ மார்க்கெட்டின் மேற்கூறையை அகற்றி விட்டனர்.

 

இதனால் பூக்கள் விற்பனை செய்பவர்கள் கடும் வெயில் தாக்கம் காரணமாக விற்பனை செய்ய முடியாமலும், பூக்கள் வாடி விடுவதாலும் தாங்கள் கொண்டு வந்த பூக்களை விற்பனை செய்ய முடியாமலும் கீழே கொட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பூக்கள் விற்பனை செய்ய முடியமால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறி வ. உ. சி. பூ மார்க்கெட் சங்க உறுப்பினர்கள் வணிக வளாக தற்காலிக பூ மார்க்கெட் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த சேலம் டவுன் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, வியாபாரிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.