ட்ரெண்டிங்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்- சேலம் ஆட்சியர் அறிவிப்பு!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "மத்திய, மாநில அரசு ஆணைகளின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (peoples plan campaign) மூலம் (2024-25) ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

 

தூய்மை பாரத இயக்கம் (பாரதம்), குடிநீர் இயக்கம், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு / பெண் கல்வியறிவு சதவீதம், ஆண்/பெண் குழந்தை பிறப்பு விகிதம், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. இக்கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.