ட்ரெண்டிங்

மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு!

 

சேலம் அருகே சித்தனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வகணபதி (வயது 30)- விஜி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கணவர் மீது விஜி சூரமங்கலம் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

 

இதையடுத்து, அவர்கள் இருவரையும் கவுன்சிலிங்குக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் மாடியில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். நேற்று (ஜன.09) மதியம் செல்வகணபதி, விஜி ஆகியோர் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கும் அதிகாரிகளின் முன்னிலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு மூண்டது.

 

இதனால் மனமுடைந்த செல்வகணபதி தற்கொலை செய்யும் நோக்கத்தில் திடீரென முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், படுகாயமடைந்த செல்வகணபதியை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வகணபதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.