ட்ரெண்டிங்

விவசாயிகளிடம் இருந்து செங்கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது-ஆட்சியர் கார்மேகம் தகவல

 

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இன்று (ஜன.10) காலை 10.00 மணிக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி, சீரங்கபாளையம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தலைமையில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., "சேலம் மாவட்டத்தில் உள்ள 1,715 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 10,70,970 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 935 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என ஆகமொத்தம் சேலம் மாவட்டத்தில் 10,71.905 குடும்பங்களுக்கு ரூபாய் 118.85 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

நாள்தோறும் ஒரு நியாய விலை கடைக்கு 250 நபர்கள் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இன்றைய தினம் தொடங்கி ஜனவரி 13- ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியில் கூட்டுறவுத்துறை, பொது விநியோகத் திட்டம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 6 அடிக்கு குறையாத செங்கரும்பு வழங்கும் வகையில் சேலம், பூலாம்பட்டியில் உள்ள சுமார் 215 உழவர்களிடம் நேரடியாக செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உரிய தொகை நேரடியாக உழவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன்மூலம் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளும் பயனடைந்துள்ளார்கள்.

அயலகத் தமிழர் தின விழா நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளதை மாவட்டத்தில் உள்ள அனைவரும் பார்த்துப் பயன்பெறும் வகையில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுக் கொண்டு தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.