ட்ரெண்டிங்

முன் மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க திருநங்கையர்களுக்கு அழைப்பு!

 

திருநங்கையருக்கான முன் மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.  

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, திருநங்கையர் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர். மேலும் சாதனை படைத்த திருநங்கையரைக் கௌரவிக்கும் வகையில் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15- ஆம் தேதி திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுவோருக்கு ரூபாய் 1,00,000- க்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது.

 

விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துக்களை வரும் பிப்ரவரி 28- ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

 

குறிப்பாக, மூன்றாம் பாலினர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 மூன்றாம் பாலினருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

 

கருத்துருக்களில், பொருளடக்கம் மற்றும் பக்க எண், சுய விவரம் (Blo Data). Passport Size Photos -2, சுய சரிதை. ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) Soft copy and Hard copy, விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் விருதின் பெயர். யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு இணைக்க வேண்டும். மேலும், சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக நல சேவையளாரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம். சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று, கையேடு (Booklet), தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.