ட்ரெண்டிங்

வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகைகள், பணம் கொள்ளை!

 

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தியாகராஜா நகரைச் சேர்ந்தவர் வாரி சீனிவாசன். பொறியாளரான இவர் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்றுவிட்டார். இவருடைய தந்தை குமார், தாய் சிவகாமி ஆகிய இருவரும் வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் (டிச.23) வீடு திரும்பினர்.

 

அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சிடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 31 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூபாய் 7,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார்.

 

அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் திருடர்கள் அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஆட்கள் யாரேனும் வந்துவிடுவார்களோ? என்ற பதற்றத்தில் திருடிய 1½ சவரன் மோதிரத்தை வீட்டில் கீழே போட்டு விட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து மோதிரத்தை காவல்துறையினர் மீட்டு குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.