ட்ரெண்டிங்

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை!

 

தந்தை பெரியாரின் 50- வது நினைவுநாளையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

அந்த வகையில், அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம் தலைமையிலான அ.தி.மு.க.வினர், தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சக்திவேல், செல்வராஜ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மாவட்ட மற்றும் பகுதி, வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் என 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து, பா.ம.க. சார்பில் சேலம் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அருள், பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். இந்த நிகழ்வில் பா.ம.க.வைச் சேர்ந்த 30- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

பெரியாரின் நினைவுத் தினத்தையொட்டி, தி.மு.க.வின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.