ட்ரெண்டிங்

எம்.ஜி.ஆர். நினைவுத் தினம்-அ.தி.மு.க. சார்பில் மரியாதை!

 

எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். சேலம் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்களும், கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

 

அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 36- வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, சேலம் அண்ணா பூங்கா அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அ.தி.மு.க.வின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் தலைமையிலான கட்சியினர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல், செல்வராஜ், ரவிச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவ் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், சேலம் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

அதேபோல், சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அ.தி.மு.க.வினரும், அவரது ரசிகர்களும் மலர்தூவியும், மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அத்துடன், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.