ட்ரெண்டிங்

இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்க சேலம் மாவட்டத்தில் உள்ள இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது, இளம் தலைமுறையினரிடையே கைத்தறி இரகத்தின் மீது பிணைப்பை ஏற்படுத்தவும், அவ்வப்போது மாறிவரும் நவீன சந்தையின் தேவையினை அறிந்து புதிய வாடிக்கையாளர்களை கவர ஏதுவாகவும், கைத்தறி இரகங்களில் புதுமையினை புகுத்தி விற்பனையினை அதிகரித்திடும் நோக்கிலும், மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித்தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள். ஜவுளி தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது.

போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 1,00,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 75,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 50,000 வழங்கப்படும். பங்கேற்பாளர்களின் தகுதி, வடிவமைப்புகளில் உள்ள துணை வகைகள், விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு நுழைவு நிபந்தனைகள் போன்றவைகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப் படிவம் மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விவரங்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் உள்ளன. இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியான பங்கேற்பாளர்கள் டிசம்பர் 31- ஆம் தேதி அல்லது அதற்கு முன் சேலம் சரக துணை இயக்குநரிடம் வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பித்து போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட
ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.