ட்ரெண்டிங்

மகளிர் உரிமைத்தொகைப் பெறுவதற்கான திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்! 

மகளிர் உரிமைத்தொகைப் பெறுவதற்கான திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், சிக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், இ.ஆ.ப, இன்று (ஜூலை 06) மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். 

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு கடந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில், "மகளிர் உரிமை தொகை திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். மகளிர் உரிமை தொகைத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களை சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாகும். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படவுள்ளது, 

தமிழக முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக, இந்த நிதியாண்டில் ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தனியாக, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் ஓமலூர் வட்டம், சிக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மயில், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி மற்றும் ஓமலூர் வட்டாட்சியர் புருசோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.