ட்ரெண்டிங்

சபரிமலை சீசன்: செகந்திராபாத்- கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்!

 

சபரிமலை சீசனைத் தொடர்ந்து, சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, செகந்திராபாத்- கொல்லம் இடையே சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் வரும் டிசம்பர் 15, 29 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், டிசம்பர் 16, 30 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்திற்கும் சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ரயில்கள், நெல்லூர், குண்டூர், ரேனிகுண்டா, காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.