ட்ரெண்டிங்

அக்.14- ஆம் தேதி இளைஞர்களுக்கான பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அ

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்ட இளைஞர்களுக்கான பல்வேறு கலைப்போட்டிகள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்ட மாவட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது. குரலிசை கருவியிசை, பரதநாட்டியம் கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சேலம் மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேலத்தில் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

 

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகள் காலை 10.00 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 02.00 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார். குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும் 5 வர்ணங்கள் இராகம், சுரத்துடன் 5 தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம் கஞ்சிரா கடம் மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சிப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

 

கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம் மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம் புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஒவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 

இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும், நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவர்; மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

 

மேலும் விவரங்களுக்கு, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தினை 99444- 57244, 90876- 75732 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க சேலம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.