ட்ரெண்டிங்

சேலம் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (செப்.25) காலை 11.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்.25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் எடப்பாடியில் 5 செ.மீ. மழையும், ஏற்காடு, மேட்டூரில் தலா 2 செ.மீ. மழையும், அணை மற்றும் ஓமலூரில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.