ட்ரெண்டிங்

சேலத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சேலம் மாவட்டத்தில் இன்றும் (செப்.22), நாளையும் (செப்.23) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று (செப்.22) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

செப்டம்பர் 23- ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம், மேட்டூரில் 5 செ.மீ. மழையும், ஓமலூர், ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.