ட்ரெண்டிங்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

 

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வீடுகளில் ஏடிஎஸ் கொசுப் பரவுவதைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கிறார்களா என்பதை வீடு, வீடாகச் சென்று கண்காணிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

காலை, மாலை என இரு வேளைகளிலும் கொசு மருந்து தெளித்தல் மற்றும் இதர கொசு ஒழிப்புப் பணிகளில் மலேரியா தடுப்புப் பணியாளர்கள் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்புக் குறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீட்டில் நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து கொசு உற்பத்தியைத் தடுக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்டம் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்தவும், மருத்துவமனைகளைத் தூய்மையாகவும், கொசு உற்பத்தி ஆகாத வண்ணம் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஐந்து நாட்களுக்குள் காய்ச்சல் இருப்பவர்களுக்கு என்எஸ்1 சோதனையும், எலிசா சோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.பி. உத்தரவிட்டுள்ளார்.