ட்ரெண்டிங்

தார் சாலை அமைக்கும் பணிகளை நேரில் செய்த மாநகராட்சி ஆணையாளர்!

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், கோபால் செட்டி தெரு மற்றும் பசுபலகுருநாதர் தெருவில் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப.,நேற்று (ஜூலை 11) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப் பின் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, "தமிழக முதலமைச்சர், பொதுமக்களுடன் தொடர்பில் நாள்தோறும் அதிகளவில் பணியாற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்திடும் வகையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்

சேலம் மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் 91.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சுமார் 9,66,191 மக்கள் தொகையைத் தற்பொழுது கொண்டுள்ள சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. சேலம் மாநகராட்சியில் 1,037 சாலைகளும், 1200.95 கி.மீ. கால்வாய்களும் அமைந்துள்ளன. 

மக்கட்தொகை அதிகரிப்பிற்கேற்ப, சேலம் மாநகராட்சியில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அதிக அளவிலான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 2022-23 மற்றும் 2023-24- ஆம் நிதியாண்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 346 சாலைகள் 334.201 கிமீ நீளத்திற்கு புதிதாக அமைக்க ரூபாய் 177.98 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 15வது மத்திய நிதிக் குழு மானிய நிதியின் கீழ் 211 சாலைகள் 897.39 கி.மீ நீளத்திற்கு புதிதாக அமைக்க ரூபாய் 497.89 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் 557 சாலைகள் 1,231.591 கி.மீ நீளத்திற்கு புதிதாக அமைக்க ரூபாய் 675.87 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.