ட்ரெண்டிங்

விடாமுயற்சியுடன் உயர்கல்வி கற்பது ஒன்றையே நோக்கமாக கொள்ள வேண்டும்! 

 


அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டும் கருத்தரங்கு சேலம் தலைவாசல் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கோடு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது தங்கள் வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான IIT எனும் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் இன்றைய தினம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது மிகவும் கவனத்துடன் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக அரசு கல்லூரிகளில் பயிலும் போது குறைவான பொருளாதார செலவில் பயின்று நல்ல வேலைவாய்ப்பிற்கு செல்ல இயலும். எனவே, தங்களுக்கான துறைகளை தேர்ந்தெடுத்து அதற்குறிய கல்லூரிகளை ஆராய்ந்து அதில் சேர வேண்டும். இதற்கென துறை வல்லுநர்களை கொண்டு உங்களுக்கு வழிகாட்டுவதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

குறிப்பாக இக்கருத்தரங்கில் IIT சேர்க்கை சார்ந்த ஆலோசனைகள், நுழைவு தேர்வுக்கு தயார்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையிலும் பல்வேறு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மாணவ, மாணவியர்களான உங்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் உயர்கல்வியை கற்பதை நோக்கமாக கொள்ள வேண்டும்.

ஒருவர் பெரும் கல்வியே அவர்களின் குடும்பத்தினரையும், சமூகத்தையும் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதால் தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களுக்கு இதுபோன்ற பயனுள்ள வழிகாட்டு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. இதனை மாணக்கார்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தலைவாசலில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தலைமையாசிரியர்கள் மற்றும் 525 மாணவ, மாணவிகளும், அதேபோன்று மேச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மேச்சேரி, தாரமங்கலம், நங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் 615 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், IIT திட்ட தலைமை ஆலோசகர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.