ட்ரெண்டிங்

சேலம் நீட் தேர்வு மாணவி தற்கொலை-அரசுக்கு இ.பி.எஸ். சரமாரி கேள்வி! 

சேலத்தைச் சேர்ந்த நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் தி.மு.க., தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்காது என்று சினிமா வசனம் பேசிய உதயநிதி, இத்தனை மரணங்களுக்கும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? 

வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று சொன்னீர்களே, அவை கொஞ்சமாவது உங்களுக்கு இருந்தால் தொடரும் நீட் மரணங்களுக்கு பொறுப்பேற்று, உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களிடம் மன்னிப்பு கோருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

தொடரும் நீட் மரணங்களைத் தமிழ்நாடு தாங்காது! நீங்கள் கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியாவது இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியேனும் மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.