ட்ரெண்டிங்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் - சேலம் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள 1,541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார். 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சரால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக, கடந்த ஜூலை மாதம் 24- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04- ஆம் தேதி வரை நடைபெற்ற 846 மையங்களில் 4,04,449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, ஆகஸ்ட் 05- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16- ஆம் தேதி வரை நடைபெற்ற 695 மையங்களில் 3,09,213 விண்ணப்பங்கள் என மொத்தம் 1,541 முகாம்கள் மூலம் 7,13,662 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை ஏற்கனவே, நடைபெற்ற அதே 1,541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. ஏற்கனவே, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.