ட்ரெண்டிங்

சேலத்தில் ஆயுதபூஜை உற்சாகக் கொண்டாட்டம்! 

ஆயுதப்பூஜையை முன்னிட்டு இன்று (அக்.11) சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி வாசலில் மாலைகள், மா தோரணங்களைக் கட்டியும் வாழை இலையில் பொரி, நிலக்கடலை, கடலை உருண்டை, சுண்டல், பொங்கல், பழங்கள் ஆகியவற்றை வைத்தும் படையலிட்டு வழிபட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர், ஏழை, எளிய மக்களுக்கு பொரிகளை வழங்கி மகிழ்ந்தனர். 

அதேபோல், மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், கார் மற்றும் இருசக்கர வாகன பழுதுப்பார்க்கும் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் தொழிலாளர்கள் தங்களது நிறுவனங்களைத் தூய்மைப்படுத்தி அலங்கார தோரணங்களைக் கொண்டு அழகுப்படுத்தி படையலிட்டு ஆயுதப்பூஜையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

பின்னர் தொழிலாளர்களுக்கு உரிமையாளர்கள் பொரிகள், பழங்கள் அடங்கிய பாக்கெட்டுகளையும், போனஸ் தொகையும் வழங்கி ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்.