ட்ரெண்டிங்

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், வாய்க்கால் பட்டறைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் புதிதாக  இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். இந்த நிலையில், தான் புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்துடன் தனது மகள் வினிதா மற்றும் வினிதாவின் ஒன்றரை வயது குழந்தை நித்தின் ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று (ஆகஸ்ட் 13) இருசக்கர வாகனத்தில் அயோத்தியாபட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். 


பின்னர், மாலை 04.00 மணியளவில் வாய்க்கால் பட்டறையில் உள்ள தனது வீட்டிற்கு ஜெகதீசன் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், உடையாப்பட்டியில் அவரது இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒன்றரை வயது குழந்தை தவறி கீழே விழுந்து, பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள், ஓடி வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு தண்ணீர் வழங்கினர். அதைத் தொடர்ந்து, அதிவேகமாக வந்த தனியார் பேருந்தை மறித்த பொதுமக்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்துச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து, பேருந்து கண்ணாடியை உடைத்த 4 பேரை கைது செய்து காவல் நிலையத்துக்கு  காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனியார் பேருந்தை காவல்நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். மேலும், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் காரணமாக, அம்மாப்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.