ட்ரெண்டிங்

வேட்பாளர்கள், முகவர்களுடன் சேலம் ஆட்சியர் ஆலோசனை! 

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (மே 10) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று நடைபெற்றது. சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்டம், கருப்பூர், அரசு பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 04- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மக்களவைப் பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முகவர்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறித்தும், வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் கண்டிப்பாக கைப்பேசி, ஐ பேட், லேப்டாப், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அவர்தம் கைப்பேசியை மேற்படி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கவுண்டரின் ஒப்படைத்து, திரும்பப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 06.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகைபுரிய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளபடி, வேட்பாளர்கள், முகவர்கள் தங்களுக்கான இடங்களில் அமர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையிலிருந்து ஜூன் 04- ஆம் தேதி 
அன்று காலை 06.00 மணியளவில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் போலீஸ்
பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு
எண்ணிக்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கையானது காலை
08.00 மணிக்கு தொடங்கப்படும். 

இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சுற்றுவாரியாக எண்ணப்பட்டு அதன் விவரங்கள் ஒலிபெருக்கி வாயிலாகவும், மின்னணு திரையின் மூலமும் சுற்று வாரியாக அறிவிக்கப்படும். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவுற்றதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேற்படி சான்றிதழ் பெற வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறித்து வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முகவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.