ட்ரெண்டிங்

பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி அருகே உள்ள தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கிய வழக்கில் ரஞ்சித்குமாரை அன்னதானப்பட்டி காவல் துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடந்த மே மாதம் உடையாப்பட்டி பகுதியில் ரஞ்சித்குமார் மர்மநபர்களால் சரமாரியாகக் கொலைச் செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்த அம்மாப்பேட்டை காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, ரவுடி ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர 

அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, மதன்குமார், மணி, புகழ், மகேந்திரன், குணசேகரன் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தாதகாப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூன்று மாதத்திற்கு பிறகு சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.