சேலத்தில் மாம்பழங்களின் வரத்து கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. இதனால் மாம்பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சேலத்து மாம்பழத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் கூட வரவேற்பு அதிகம். ஆண்டுதோறும் மாம்பழம் சீசனில் மாம்பழங்கள் விற்பனை களைக்கட்டும். இந்தாண்டும் போதிய மாம்பழம் வரத்து இல்லாமல் வியாபாரிகள் செய்வதறியாது இருக்கிறார்கள்.
இது குறித்து மாம்பழம் தோட்ட உரிமையாளர்கள் கூறுகையில், "இந்த ஆண்டு வெயில் அதிகம்; சேலத்தில் 107 டிகிரி செல்ஸியஸை வெப்பநிலைத் தாண்டியுள்ளது. வெயில் அதிகரித்திருப்பதால் பிஞ்சு உதிர்வு அதிகமாக உள்ளது. மாசி மாதம் வரும் மழையும் வராததால் பாதிப்பு அதிகம்" எனத் தெரிவித்துள்ளனர்.
வரத்து குறைந்துவிட்ட நிலையில், மாம்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. பல ரக மாம்பழங்களின் விலை 30% முதல் 40% வரை அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்கள் மாம்பழங்களைக் கூடுதல் விலைக் கொடுத்து வாங்க தயாராகவே உள்ளனர். விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் வரும் ஆர்டர்களுக்கு மாம்பழங்களை வழங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.
இந்த ஆண்டு மாம்பழங்களை தேவை அதிக இருந்தாலும், போதிய வரத்து இல்லாமல் வியாபாரிகள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களும் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர்.