ட்ரெண்டிங்

ஜவுளிக்கடையில் சேலைகளைத் திருடிய கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு! 

சேலம் மாவட்டம், பூவனூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவர் ஜாரி கொண்டலாம்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 03- ஆம் தேதி அன்று இவரது ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. கூட்டத்தைப் பயன்படுத்திக் கடைக்குள் நுழைந்த ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் கொண்ட கும்பல் சேலைகளைத் திருடிச் சென்றுள்ளது. 

அன்றையத் தினம் மாலை சேலைகளில் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்ற சேலைகளுக்கும், விற்பனையாகாமல் உள்ள சேலைகளின் எண்ணிக்கையில் மாறுபாடு இருந்தது. 

பின்னர், மறுமுறை சேலை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், 16 சேலைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, பணியாளர்கள், ஜவுளிக்கடையில் உரிமையாளர் தங்கராஜுவிடம் கூறியுள்ளனர். 

இதையடுத்து, தங்கராஜ்  தனது கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் 35 மதிக்கத்தக்க 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நபர் என நான்கு பேர் கொண்ட கும்பல் 16 சேலைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளுடன் சென்ற தங்கராஜ், கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.