ட்ரெண்டிங்

பதற்றமான வாக்குச்சாவடிகள்- அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! 

மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (மார்ச் 07) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது, 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி, ஆத்தூர் மற்றும் ஏற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி
மையங்களில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்திற்கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு இருக்கக் கூடிய சூழ்நிலைகளை ஆராய்ந்து உரிய ஆய்வறிக்கையினை முன்னதாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்வதுடன், தங்களுக்கு கீழ் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இதுகுறித்த பயிற்சியினை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வழங்கப்படும் வாக்குப்பதிவிற்குத் தேவையான வாக்குச்சாவடிப் பொருட்களை முறையாக வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒப்படைப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வைப்பு அறைகளுக்கு முறையாக கொண்டு செல்லுதல், வாக்குச் சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.