ட்ரெண்டிங்

தேர்வு மையங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு! 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 01) தொடங்கியுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் ஒன்றான சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 01) முதல் மார்ச் 22- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் 16,304 மாணவர்கள். 19,135 மாணவிகள் என மொத்தம் 35,439 பேர் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக, 256 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் உதவியுடன் (Scribe) தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 151 தேர்வு மையங்களில் இப்பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், 18 பறக்கும் படையினர். 150 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் துணை அலுவலர்கள், 2,634 அறைக் கண்காணிப்பாளர்கள். 151 தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 3,606 தேர்வுப் பணியாளர்கள் இப்பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பொதுத்தேர்வை முறையாகக் கண்காணித்து நடத்திடத் தேவையான அறிவுரைகள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடுவதை உறுதி செய்திடும் வகையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது கொள்கிறேன். இவ்வாறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.