ட்ரெண்டிங்

கோயில் விழாவில் நாட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது...சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

 

சேலம் மாவட்டம், எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள அமைந்துள்ளது இருசாயிஅம்மன் கோயில். இந்த கோயிலில் தவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவையொட்டி, இனாம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாரமங்கலத்தில் இருந்து நாட்டு பட்டாசுகளை வெடிப்பதற்காக வாங்கி வந்துள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்.12) காலை 11.00 மணியளவில் சக்திவேல் நாட்டு வெடி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த போது, தீப்பொறி அவர் கையில் வைத்திருந்த பட்டாசுகளின் மீது விழுந்தது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதுடன், சக்திவேலும் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் துடித்துடித்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே வாகனங்களில் சென்ற காவல்துறையினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்த நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முறையான அனுமதி பெற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதா? கோயில் திருவிழாவிற்கு அனுமதி பெறப்பட்டதா? என்று குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.