ட்ரெண்டிங்

உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

 

சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, இ.ஆ.ப. மேட்டூரில் முகாமிட்டு "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (பிப்.01) கள ஆய்வு மேற்கொண்டார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்ட முகாமானது. நேற்றைய தினம் காலை 09.00 மணிக்கு தொடங்கி, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட 48 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் நேற்றைய தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவுக் கூடங்கள், தெரு விளக்குகளின் செயல்பாடுகள் என இரவு வரை ஆய்வு செய்து, மேட்டூர் வட்டத்தில் தங்கி இன்றைய தினம் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

இன்றைய தினம் அதிகாலை 06.00 மணி முதல் வீரக்கல், காட்டுவளவு பகுதியில் ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறித்தும், நங்கவள்ளி பேரூராட்சி, கிழக்கு இரத வீதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் வசதிகள் குறித்தும், இப்பகுதியிலேயே திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்தும் என்னால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும், இப்பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள், வனவாசி பேரூராட்சிப் பகுதியில் செயல்பட்டுவரும் வளமீட்புப் பூங்காவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும். மக்காத

குப்பைகளை தரம் பிரித்து விற்பனை செய்யும் பணிகள் குறித்தும், ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சீரமைக்கும் பணியினையும், ஜலகண்டாபுரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விற்பனைக்காக தங்கள் விளைப் பொருட்களைக் கொண்டு வந்திருந்த விவசாயிகளிடமும், காய்கறிகளை கொள்முதல் செய்ய வருகைபுரிந்த பொதுமக்களிடமும் உழவர் சந்தைக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.

 

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரண்டு நாட்கள் மேட்டூர் வட்டத்தில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கள ஆய்வு குறித்த அறிக்கையினை இன்றையதினம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்களின்மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்.