ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் 42 இடங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு!

 

சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 42 இடங்களில் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நடத்தினர்.

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையாக கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில், மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் இன்று (ஜன.28) ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

 

சேலம் மாவட்ட வனத்துறையின் வனக்கோட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் இந்த ஈர நிலப்பகுதி பறவைகள் கணக்கெடுப்பு இன்று காலை 06.00 மணிக்கு தொடங்கியது. இப்பணியை அந்தந்த மாவட்ட வன அலுவலர் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர். சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர், வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சேர்வராயன் மலை, ஜருகுமலை, 

சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை அடிவார பகுதிகள், அங்குள்ள குட்டைகள், ஏரிகள் போன்றவற்றில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

 

சேலம் மூக்கனேரி பகுதியில் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தலைமையில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பை காலை நடத்தினர். ஏரிப்பகுதியில் இருந்த ஒவ்வொரு பறவைகளையும் பைனாகுலர் மூலம் பார்த்து, அதன் விவரத்தைப் பதிவுச் செய்துக் கொண்டனர். 

 

மொத்தமாக சேலம் வனக்கோட்டத்தில் 20 பேர், 21 இடங்களில் இந்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.

கணக்கெடுப்புக் குறித்து மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று நடக்கிறது. சேலம் வனக்கோட்டத்தில் 200பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகளை கண்டு, தனியாக பதிவு செய்கிறோம். அதுபோக இங்குள்ள பல வகை பறவைகளில் புதியனவற்றை பார்க்கிறோம். எத்தனை வகையான பறவைகளைக் கண்டறிந்தோம் என்பதை பதிவிட்டு வனத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்பி வைப்போம்.

பிறகு சேலம் வனப்பகுதியில் காணப்பட்ட புதிய வகை பறவைகள் குறித்த தகவலை வெளியிடுவோம். கடந்தாண்டு காணப்பட்ட பறவைகள் போக சில புதிய வகை பறவைகளை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.